சுவர் ஏறிகுதித்து வீட்டிற்குள் சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது


சுவர் ஏறிகுதித்து வீட்டிற்குள் சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது
x
தினத்தந்தி 21 Aug 2019 4:26 PM GMT (Updated: 21 Aug 2019 4:32 PM GMT)

டெல்லியில் சுவர் ஏறிகுதித்து வீட்டிற்கு சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை கைது செய்துள்ளது.


காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம்.

மத்திய நிதி மந்திரியாக அவர் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரும் சேர்க்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அமலாக்கத்துறை அவருடைய சொத்துகளை முடக்கியது. ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. ப.சிதம்பரம் கைதுக்கு எதிராக ஐகோர்ட்டு அவ்வப்போது இடைக்கால தடை விதித்து வந்தது.

ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது. ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு தரப்பில் வாதாடப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 25-ந்தேதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில்கவுர் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.  

இதனையடுத்து அவரது தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.  அதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. மனுதொடர்பாக இன்று விசாரணையில்லை என தெரியவந்தது. இந்நிலையில் சிபிஐயையும், அமலாக்கப்பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகிறது என விசாரணை முகமைகளின் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.  அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

அவருடைய முன்ஜாமீன் மனு தொடர்பாக வெள்ளிக்கிழமையே விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனக்கு எதிராகவும், தனது குடும்பத்தினருக்கு எதிராகவும் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றார். மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய பின்னர் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கு திரும்பினார். அவர் பின்னால் சிபிஐ அதிகாரிகளும் சென்றனர். அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். எனவே சிதம்பரம் வீட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

சிதம்பரம் ஆலோசனை

 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குடியிருப்பின் பின்புறம், முன்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர். இதனால் அந்தப்பகுதி பரபரப்பாக உள்ளது. சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் நிலையில், வழக்கறிஞர்களுடன் ப.சிதம்பரம் வீட்டிற்குள் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகியது. ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு, சிபிஐ அதிகாரிகள் கைது செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியது. சிதம்பரம் வீட்டில் பெரும் பரபரப்பு நேரிட்டது.

காங்கிரசார் போராட்டம்

அமலாக்கப்பிரிவு, சிபிஐ அதிகாரிகள் முற்றுகையிட்ட நிலையில் டெல்லி போலீசும் விரைந்தது. மீடியாக்களும் குவிந்தது. சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்களும் அங்கு விரைந்தனர். அவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். டெல்லியில் சிபிஐ தலைமையகத்திற்கு அதன் இயக்குநர் ஆர்.கே. சுக்லா விரைந்தார். டெல்லி போலீஸ் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது. 

சிதம்பரம்  கைது

ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து அவருடைய வீட்டிலிருந்து வாகனங்கள் வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உடடியாக அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். அவர்களுடன் அமலாக்கப்பிரிவினரும் உடன் இருந்தனர். சுமார் 24 மணி நேரங்கள் டெல்லியில் நடந்த மிகப்பெரிய ’டிராமா’ கைதுடன் முடிவுக்கு வந்துள்ளது. சிதம்பரத்துடன் அவருடைய நண்பர்களும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித் மற்றும் கபில் சிபல் உள்ளனர். அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படலாம் என தெரிகிறது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ, அமலாக்கப்பிரிவு அனுமதியை கோரும். அவருடைய கைது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 

Next Story