ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை


ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 21 Aug 2019 9:30 PM GMT (Updated: 21 Aug 2019 9:30 PM GMT)

ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இடையே புதிய ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ரெயில்வே மந்திரியிடம், டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரியை, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் சாலைகள் உள்ளடங்கி உள்ளன. எனவே இப்பகுதியில் நெருக்கடி பிரச்சினைகள் இல்லாமல் பாதுகாப்பாக வாகனங்கள் செல்ல தளம் பிரிப்பு மேம்பாலம் (கிரேடு செப்பரேட்டர்) அவசியம். அதேபோல தண்டலம் மற்றும் சந்தை வேலூர் கிராமங்களில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தேஜஸ் ரெயிலை தாம்பரத்தில் ஒருநிமிடம் நின்று செல்லவேண்டும், திரிசூலம்-மீனம்பாக்கத்தில் சுரங்கப்பாதை, ஆலந்தூரில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும், நீண்ட ஆண்டு கோரிக்கையான ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி ரெயில் பாதை திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து, டி.ஆர்.பாலு மனு அளித்தார்.

இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரிகள் உறுதி அளித்தனர்.


Next Story