8 வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்படாது; மத்திய அரசு உறுதி


8 வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்படாது; மத்திய அரசு உறுதி
x
தினத்தந்தி 22 Aug 2019 6:20 AM GMT (Updated: 22 Aug 2019 6:20 AM GMT)

8 வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்படாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த திட்டத்தால், சேர்வராயன், கல்வராயன் உள்பட 8 மலைகள் உடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல், சென்னை- மதுரை பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அந்த திட்டத்துக்குரிய நிதியை கொண்டு சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அதை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு மீது இன்று நடந்த விசாரணையில் மத்திய அரசு தரப்பில் கூறும்பொழுது, 8 வழிச்சாலை திட்டம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

நிலம் கையகப்படுத்துதல் என்பது முதற்கட்ட நடவடிக்கையே ஆகும்.  சுற்றுச்சூழல் அனுமதி என்பது ஒரு நடைமுறையே தவிர, அது இந்த விவகாரத்தில் ஒரு பிரச்சினையே இல்லை.

8 வழிச்சாலை திட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே கட்டுமான பணிகளை மேற்கொள்வோம்.  அதனால் நிலம் கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் கோரியது.  சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதியளித்து உள்ளது.  எனினும், மத்திய அரசின் இந்த திட்டம் குழப்பம் நிறைந்த ஒன்றாகவுள்ளது என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

Next Story