மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்


மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்
x
தினத்தந்தி 22 Aug 2019 11:21 AM GMT (Updated: 22 Aug 2019 11:21 AM GMT)

மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவருடைய மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது. ப.சிதம்பரத்துக்கு எதிராக தேடுதல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று திடீரென்று அவர் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார். நேற்று இரவு சிபிஐ அவரை அதிரடியாக கைது செய்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார்.  அதில், "நானும், எனது கணவர் பீட்டர் முகர்ஜியும் 2006 ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தோம். அப்போது அவர், தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்திக்கும்படியும், கார்த்தி சிதம்பரத்தின் தொழிலுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார். 

டெல்லி ஹயத் ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தை  சந்தித்தோம். அவர் எங்களிடம் 1 மில்லியன் டாலர் லஞ்சமாக கேட்டார்" என கூறினார். இந்திராணி முகர்ஜியின் இந்த வாக்குமூலம் தான் ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனை வைத்து விசாரணை முகமைகள் நேர்த்தியாக காய் நகர்த்தியது. இந்நிலையில் மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.

ப.சிதம்பரத்தை கைது செய்வது தொடர்பாக சிபிஐ மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதலை முன்வைத்துள்ள காங்கிரஸ், கட்சியின் தலைவரை அவமானப்படுத்தவும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்திராணி முகர்ஜியின் பெயரை குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா, “தனது சொந்த மகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணின் அறிக்கையின் பேரில் ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதி கைது செய்யப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார். 

Next Story