டெல்லியில் தி.மு.க. தலைமையில் 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம் காஷ்மீரில் வீட்டு சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தல்


டெல்லியில் தி.மு.க. தலைமையில் 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம் காஷ்மீரில் வீட்டு சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Aug 2019 11:30 PM GMT (Updated: 22 Aug 2019 7:24 PM GMT)

காஷ்மீரில் வீட்டுசிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் தி.மு.க. தலைமையில் 14 கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி, 

காஷ்மீரில் வீட்டுசிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் தி.மு.க. தலைமையில் 14 கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சகத் லோன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் காஷ்மீரில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிணங்க டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

14 கட்சிகள் பங்கேற்பு

தி.மு.க. ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்றன.

ஆர்ப்பாட்டத்துக்கு மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். தி.மு.க. எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கார்த்திக் ப.சிதம்பரம் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தாகரத், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தீர்மானம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

ஜம்மு காஷ்மீர் மக்களையோ, அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்காமல் அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப் பிரிவு 370ஐ நீக்கியிருப்பதன் விளைவாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களாகிய நாங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்கிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், சிவில் சொசைட்டியின் உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கைது செய்து தொடர்ந்து வீட்டுச் சிறையில் மத்திய அரசு வைத்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. ஆகவே, வீட்டு சிறையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், அப்பாவி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

வலியுறுத்தல்

மக்களின் பேச்சுரிமையை பறித்தும், அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்தும் மத்திய அரசு எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள் அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால் அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சகஜ நிலைமை திரும்புவதற்கும், அம்மாநில மக்கள் தங்களின் உற்றார் உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகள் மீண்டும் அளிக்கப்படவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாகிய நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story