இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு: செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்


இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவு: செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 23 Aug 2019 11:44 AM GMT (Updated: 23 Aug 2019 12:08 PM GMT)

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

புதுடெல்லி,

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது. 

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். பல்வேறு  தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும். அதேபோல் லட்சக்கணக்கானோர் வேலையை இழக்க வேண்டிய நிலை உருவாகி வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள்.

2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8லிருந்து 6.2ஆக குறைந்துள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்க உள்ளார்.  அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story