சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார் - அமித்ஷா


சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார் - அமித்ஷா
x
தினத்தந்தி 24 Aug 2019 5:33 PM GMT (Updated: 24 Aug 2019 5:33 PM GMT)

சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றி உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, “ சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நாடாளுமன்றம் அங்கீகரித்துவிட்டது.

சமஸ்தானங்களாக பிரிந்திருந்த இந்திய நாட்டை நாட்டின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேல் ஒருங்கிணைத்தார். ஜம்மு-காஷ்மீர் அதில் விடுபட்டு விட்டது. தற்போது அந்தக் குறை நீங்கி உள்ளது. இந்தியா நாடு பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல், சைபர் கிரைம் மற்றும் அண்டை நாடுகளால் ஏற்பட்டுள்ள சவால்கள் போன்ற உள்நாட்டு பாதுகாப்புக்கு நாடு பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஆகவே இந்தப் பிரச்னைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணாமல் இந்தியா வளர்ந்த நாடாக உருவாக முடியாது.

இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் மோடியின் பார்வையை அடைய அமைதியும், பாதுகாப்பும் அவசியம். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேலின் கனவை மோடி நிறைவேற்றியுள்ளார். ” என்று கூறினார்.

மேலும் உள்நாட்டு பாதுகாப்பைப் பேணுவதில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும், வலுவான உள் பாதுகாப்பு இல்லாவிட்டால் இந்தியா பாதுகாப்பான நாடாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Next Story