ப.சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் முறையிட விருப்பம்
ப.சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் முறையிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிதம்பரம் ஆகஸ்ட் 21 அன்று சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போது ஆகஸ்ட் 30 வரை சிபிஐ காவலில் உள்ளார். சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் என்ன கேள்வி கேட்டாலும் அவர் யெஸ், நோ என்ற ஒரு பதிலை மட்டுமே மாறி, மாறி கூறி வருகிறார். இதனால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இதுவரை சிபிஐயிடம் அளித்த பதில்களில் சிபிஐ திருப்தி அடையவில்லை. இதைத் தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனையை நடத்த விரும்புவதாக மத்திய புலனாய்வு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வாதிட வாய்ப்புள்ளது என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
சோதனை நடத்தப்படும் நபர் அதற்கு சம்மதித்தால் மட்டுமே உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடியும். எவ்வாறாயினும், சிதம்பரம் சம்மதிப்பாரா என விசாரணை நிறுவனம் அச்சமடைகிறது.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில்: சிபிஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்றால் அவருக்கு நார்கோ டெஸ்ட் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story