வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளோம் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்
வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளோம் என சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
புதுடெல்லி
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் சி.பி.ஐ. ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகிறது. அவருடைய காவல் விசாரணை 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது.
ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் நேற்று வாதாடினார். இன்று அமலாக்கத்துறை தரப்பில் பதில் வாதங்களை இன்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்தார்.
ப.சிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் செயலோ, வேட்டையாடுதலோ அல்ல; வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளோம்.
ஆதாரங்கள் அடிப்படையில், வழக்கில் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதை அறிந்த பின்னரே அவரை கைது செய்ய முடிவு செய்தோம். குற்றப்பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.
‘சட்டவிரோத பணப்பரிமாற்றம் குற்றமல்ல; மிகப்பெரிய குற்றம்’ ப.சிதம்பரம் அறிவாளி மற்றும் சாதுரியம்மிக்கவர் என்பதால் இதுபோன்ற சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபட முடிந்தது
வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்பிக்க முயற்சிக்கிறாரே தவிர ஒத்துழைப்பு வழங்கவில்லை. வீடு, சொத்துகளின் விவரம், நிறுவனங்கள் என வழக்கில் தொடர்புடைய பல ஆதாரங்கள் வெளிநாட்டு வங்கி மூலம் கிடைத்துள்ளன. எனவே வழக்கு தொடர்புடைய விபரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத்துறை வெளிநாடுகளிலிருந்து திரட்டியுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை என்பது ஒரு கிரிமினல் குற்றமே என வாதிட்டார்.
மேலும் வாதங்களை நாளை முடித்துக் கொள்வதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய நாளை காலை வரை தடையை நீடித்தது சுப்ரீம் கோர்ட். நாளை காலை 11.30 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story