காஷ்மீர் பற்றிய பொய் கருத்துக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்


காஷ்மீர் பற்றிய பொய் கருத்துக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Aug 2019 10:15 PM GMT (Updated: 28 Aug 2019 9:54 PM GMT)

காஷ்மீர் பற்றிய பொய் கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காஷ்மீரில் மக்கள் செத்து கொண்டிருப்பதாக தகவல் வருகிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். அவர் சொல்வது தவறு. பொய்யான கருத்துகளை சொல்லி, பாகிஸ்தான் கைகளில் விளையாட்டு பொம்மையாக இருக்கிறார், ராகுல்காந்தி. இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

காஷ்மீரில் இதுவரை வன்முறை எதுவும் நடக்கவில்லை. ஆனால், காஷ்மீர் பிரச்சினையில் ராகுல்காந்தி ஓட்டு வங்கி அரசியல் செய்கிறார். காஷ்மீர், இந்தியாவின் உள்விவகாரம் என்று தனது வாயாலேயே சொல்லும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று தனது சொந்த தொகுதியான அமேதிக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தியின் கருத்தை ஐ.நா. சபைக்கு எழுதிய கடிதத்தில் பாகிஸ்தான் பயன்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான், ராகுலின் ஆதரவைப் பெறுவது இது முதல்முறை அல்ல. இந்தியாவை பற்றி குறைத்து மதிப்பிடுகிற, எதிரி நாட்டால் விரும்பப்படுகிற ஒரு தலைவர், இந்தியாவில் இருப்பது நமது துரதிருஷ்டம்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து பற்றி அமித்ஷா அறிவித்தவுடன், காங்கிரஸ் எழுப்பிய ஆட்சேபனைகளை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை காங்கிரஸ் கட்சி உணர வேண்டும். ராகுல்காந்தி, பிரிவினை நெருப்பை பற்ற வைக்காமல் இருந்தாலே போதும். அங்கு வாழும் மக்கள், வளர்ச்சி திட்டங்களை விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது உடன் இருந்த உத்தரபிரதேச மந்திரி கேசவ் பிரசாத் மவுர்யா, பாகிஸ்தானை எதிர்கொள்ள உத்தரபிரதேசம் மட்டுமே போதும் என்று கூறினார்.


Next Story