ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்.5 ஆம் தேதி வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம்


ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்.5 ஆம் தேதி வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 3 Sep 2019 9:16 AM GMT (Updated: 3 Sep 2019 9:16 AM GMT)

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்.5 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 21-ந்தேதி இரவு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மறுநாள் டெல்லி ரவுஸ் நிழற்சாலை பகுதியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். பின்னர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் 30-ந்தேதி வரையும், பின்னர் செப்டம்பர் 2-ந்தேதி (நேற்று) வரையும் நீட்டித்து தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த  உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 5-ஆம் தேதி வரை  நீட்டித்து உத்தரவிட்டது. சிபிஐ, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டாம் எனவும், அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் எனவும்  சிபிஐ கூறிய  நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதி வரை தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story