மெகபூபா முப்தியின் மகள் ஸ்ரீநகர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி


மெகபூபா முப்தியின் மகள் ஸ்ரீநகர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 5 Sep 2019 5:57 AM GMT (Updated: 5 Sep 2019 5:57 AM GMT)

மெகபூபா முப்தியின் மகள் ஸ்ரீநகர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து அங்கு வதந்திகள் பரவி வன்முறை ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது. 

போரட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், முன்னாள் முதல் மந்திரிகளான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தனது தாயாரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மெகபூபா முப்தியின் மகள் சனா இல்டிஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

ஒரு மாதமாக வீட்டுக்காவலில் உள்ள எனது தாயாரின் உடல்நிலை பற்றி  கவலை ஏற்பட்டுள்ளதால், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என இல்டிஜா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். சனா இல்டிஜாவின்  கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், மெகபூபா முப்தியை சந்திக்க அனுமதி அளித்துள்ளது.

Next Story