சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள்


சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள்
x
தினத்தந்தி 6 Sep 2019 6:46 AM GMT (Updated: 6 Sep 2019 6:46 AM GMT)

சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதை அமெரிக்க விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

வாஷிங்டன்,

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.

கடந்த மாதம் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.

3-ந்தேதி மற்றும் நேற்று முன்தினம் என்று 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி உள்ளது.

‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நாளை(சனிக்கிழமை) அதிகாலையில் நடக்க உள்ளது. அதாவது விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து உள்ளனர்.

நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை ஒரு நிலவு நாள் (14 பூமி நாட்கள்) நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.

சந்திரயான்-2 நிலவில் கால்பதிக்கும் சரித்திர நிகழ்வை தேசம் முழுவதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறது. சவாலான இந்த சாதனையை நிகழ்த்தும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற இருக்கிறது. நாளை இஸ்ரோ நிகழ்த்தவிருக்கும் இந்த சரித்திர சாதனை நிகழ்வை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

நிலவின் சூழலியல் குறித்து அறிய, சந்திரயான் 2 மேற்கொள்ளும் பணிகள் உதவும் என்று அமெரிக்க விண்வெளி சமூகத்தினர் நம்புகின்றனர். சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நிமிடத்துக்கு நிமிடம் நாசா விஞ்ஞானிகளும் உன்னிப்பாக கவனிக்க உள்ளனர். பிரக்யான் என்று அழைக்கப்படும் ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவர் செல்லும்,  நிலவின் தென் துருவம், நிலவின் பரப்பில் மிகவும் முக்கியமான பகுதியாகும் என்று ஸ்பேஸ்.காம் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது.  

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ்,  ஹாலிவுட் திரைப்படம் இன்டெர்செல்லர் திரைப்படம் தயாரிக்கப்பட்ட செலவை விட குறைந்த செலவில் சந்திரயான் 2 விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. விண்வெளியில் வல்லரசாகும் தனது லட்சியத்தில் ஒரு படி இந்தியா முன்னேறி இருப்பதாக சிஎன்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

Next Story