சந்திரயான்-2 நிலவில் கால்பதிக்கும் அந்த 15 நிமிடம் திகிலூட்டுவதாக இருக்கும் -இஸ்ரோ சிவன்


சந்திரயான்-2 நிலவில் கால்பதிக்கும் அந்த 15 நிமிடம் திகிலூட்டுவதாக இருக்கும் -இஸ்ரோ சிவன்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:07 AM GMT (Updated: 6 Sep 2019 10:07 AM GMT)

சந்திரயான்-2 நிலவில் கால்பதிக்கும் அந்த 15 நிமிடம் திகிலூட்டுவதாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.

பெங்களூரு

சந்திரயான்-2 நிலவில் கால்பதிக்கும் சரித்திர நிகழ்வை தேசம் முழுவதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறது. சவாலான இந்த சாதனையை நிகழ்த்தும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற இருக்கிறது. நாளை இஸ்ரோ நிகழ்த்தவிருக்கும் இந்த சரித்திர சாதனை நிகழ்வை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் நடக்க உள்ளது. அதாவது விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து உள்ளனர்.

நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை ஒரு நிலவு நாள் (14 பூமி நாட்கள்) நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்.

இந்த நிகழ்வு குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:-

இது எங்களுக்கு ஒரு திகிலூட்டும் தருணமாக இருக்கும். ஒவ்வொருவரின் கண்களும் அவற்றின் கன்சோல்களில் ஒட்டப்படும். டெலிமெட்ரி அளவுருக்கள் நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும், ஆனால் அதே நேரத்தில் அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து நிறைய கவலைகள் இருக்கும்.

இது மிகவும் சிக்கலான செயல்முறை, இது எங்களுக்கு புதியது, ஏற்கனவே செய்தவர்களுக்கு கூட இது ஒவ்வொரு முறையும்,  ஒரு சிக்கலான செயல்முறையாகும். இங்கே நாங்கள் முதல் முறையாக செய்கிறோம், எனவே இது எங்களுக்கு பதினைந்து நிமிட பயங்கரமாக இருக்கும் என கூறினார்.

Next Story