கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு


கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Sep 2019 7:52 PM GMT (Updated: 8 Sep 2019 7:52 PM GMT)

கேரளாவில் மோட்டார் வாகன சட்டத்துக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

திருவனந்தபுரம்,

சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தி உள்ளன. அதேநேரம் இந்த சட்டத்துக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் கேரளாவும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘சாலை விபத்துகளை நிச்சயம் குறைக்க வேண்டும். அதற்கு ஏற்கனவே இருக்கும் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தினாலே போதும். அதிக அபராதங்கள் விதிப்பது ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே இந்த காரணிகளை பரிசீலித்து மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதே கருத்தை வலியுறுத்திய மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, புதிய சட்டப்படி அதிக அபராதம் விதிக்கக்கூடாது என முதல்-மந்திரி பினராயி விஜயனை கேட்டுக்கொண்டார். மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என கூறியிருப்பது போல கேரளாவும் இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார்.

Next Story