இந்தியாவின் உள்நாட்டில் உருவாகும் முதல் போர் கப்பலின் கணினி பொருட்கள் கொள்ளை


இந்தியாவின் உள்நாட்டில் உருவாகும் முதல் போர் கப்பலின் கணினி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 18 Sep 2019 3:21 AM GMT (Updated: 18 Sep 2019 3:21 AM GMT)

இந்தியாவின் உள்நாட்டில் உருவாகும் முதல் போர் கப்பலின் கணினியில் மின்னணு பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கொச்சி,

நாட்டில் முதன்முறையாக உள்நாட்டில் உருவாகி வரும் போர் கப்பல் விக்ராந்த்.  கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படும் இந்த கப்பலை வருகிற 2021ம் ஆண்டில் இந்திய கப்பற்படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கப்பலில் பெங்களூரு நகரை அடிப்படையாக கொண்ட பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் அதிநவீன கணினிகளை நிறுவியுள்ளது.  நாட்டின் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உருவாகி வரும் கப்பலின் கணினியில் இருந்து மின்னணு பொருட்கள் களவு போயுள்ளன.  ஹார்ட் டிஸ்க், ரேம் மற்றும் புராசஸர் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு உள்ளன.

எனினும் இந்த சம்பவம் எப்பொழுது நடந்தது என சரியான தகவல் கிடைக்கவில்லை என்று கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்தின் நெருங்கிய வட்டார தகவல் இன்று தெரிவித்துள்ளது.  இதுபற்றி எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் அதன் மேலாளர் புகார் தெரிவித்துள்ளார்.

Next Story