ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவுக்கு எதிராக சி.பி.ஐ. பதில் மனு தாக்கல்


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவுக்கு எதிராக சி.பி.ஐ. பதில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 20 Sep 2019 10:45 PM GMT (Updated: 20 Sep 2019 9:24 PM GMT)

ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவுக்கு எதிராக சி.பி.ஐ. நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, கடந்த மாதம் 21-ந்தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 5-ந்தேதி ப.சிதம்பரம் 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 12-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ் குமார் கைத், ப.சிதம்பரத்தின் மனு மீது சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, 7 நாட்களுக்குள் சி.பி.ஐ. தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டில் நேற்று சி.பி.ஐ தரப்பில், ப.சிதம்பரத்தின் ஜாமீன் கோரும் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்குவதற்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ப.சிதம்பரத்தின் 14 நாள் நீதிமன்ற காவல் கடந்த 19-ந்தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அன்று அவர் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


Next Story