பாஜக வெற்றி பெற புல்வாமா போன்ற தாக்குதல் தேவைப்படும் - சரத்பவார்!


பாஜக வெற்றி பெற புல்வாமா போன்ற தாக்குதல் தேவைப்படும்  - சரத்பவார்!
x
தினத்தந்தி 21 Sep 2019 10:12 AM GMT (Updated: 21 Sep 2019 10:12 AM GMT)

மராட்டிய தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமானால் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மும்பை

மராட்டிய மாநில சட்டசபை   ஆட்சிக்காலம் நவம்பரில் முடிவடையும் நிலையில் தேர்தல் அடுத்த மாதம் 21 ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்  தேர்தல் குறித்து பேசிய தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார்  நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் கோபமாக உள்ளனர்.  புல்வாமா போன்ற தாக்குதலால் மட்டுமே பாஜக-விற்கு சாதகமான முடிவை தேடி தர முடியும்.

மராட்டிய  மக்கள் கோபப்படுவது பாஜகவின் வருங்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள்  மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் நிலவியதைப் போன்ற ஒரு நிலை ஆளும் கூட்டணிக்கு உதவக்கூடும்.

ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா  உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இதனை ​​காங்கிரஸ் எதிர்த்தது.

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்  ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை.பாஜக-சிவசேனா அரசாங்கத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்பாக இல்லை.

மத்திய அரசு, மத்திய புலனாய்வு அமைப்பு  மற்றும் அமலாக்க துறை போன்ற அமைப்புகளை  தவறாக பயன்படுத்துகிறது.  இதுபோன்ற அமைப்புகளை பற்றி மக்கள் கூட அறிந்திருக்கவில்லை, ஆனால் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அனைத்து துறை குறித்தும் அறிந்து கொள்ள தொடங்கி விட்டனர்.

எங்கள் அண்டை நாடு மீது எனக்கு அன்பு இருப்பதாக பிரதமர் கூறினார். நான் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். என்னை விமர்சிக்கும் முன் பிரதமர் எனது அறிக்கையை சரி பார்த்திருக்க வேண்டும்.

பாகிஸ்தானின் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் பாகிஸ்தான் அரசியலில் தங்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள இந்தியாவுக்கு எதிராக தவறான அறிக்கைகளை வெளியிடுவதாக நான் கூறியிருந்தேன. இந்த வார்த்தைகள் பாகிஸ்தானுக்கு எந்த அன்பையும் காட்டவில்லை.

பிரதமர் பதவியின் கவுரவத்தை புண்படுத்த நான் விரும்பாததால் நான் மோடியை மேலும் விமர்சிக்கவில்லை என கூறினார்.

Next Story