காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, பாஜக தேசபக்தியாக பார்க்கிறது - அமித் ஷா


காஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, பாஜக தேசபக்தியாக பார்க்கிறது - அமித் ஷா
x
தினத்தந்தி 22 Sep 2019 10:11 AM GMT (Updated: 22 Sep 2019 10:52 AM GMT)

காஷ்மீர் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது. ஆனால் பாஜக அதனை தேசபக்தியாக பார்க்கிறது என்று உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தொகுதிப் பங்கீட்டில் பாஜகவுக்கும், சிவேசேனாவுக்கும் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால், இரு கட்சியினரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவை நீக்கியது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரியும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது போன்றவற்றில் பாஜகவுக்கு எந்தவிதமான அரசியலும் இல்லை. அரசியல்ரீதியாகவும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சிதான் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறது. பாஜக அதனை தேசபக்தியாக பார்க்கிறது. 

பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டபோது, தவறான நேரத்தில் போர் நிறுத்தத்தை முன்னாள் பிரதமர் நேரு அறிவித்ததால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது.  நேரு போர் நிறுத்தத்தை அறிவிக்காதிருந்தால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.

இந்த விவகாரத்தை அப்போது சர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால், பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் என்ற பகுதியே இருந்திருக்காது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370-வது பிரிவு நீக்கப்பட்டபின், ஏறக்குறைய 50 நாட்களில் ஒரு துப்பாக்கி குண்டு கூட எந்த மக்கள் மீதும் பயன்படுத்தப்படவில்லை. இனி வரும் நாட்களில் காஷ்மீரில் எந்தவிதமான பதற்றமும் இருக்காது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பின் 370-வது பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நான் கேட்கிறேன். 370-வது பிரிவை நீக்கியதற்கு எதிர்க்கிறார்களா அல்லது நீக்கியதை ஆதரிக்கிறார்களா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story