மத்திய பிரதேசத்தில் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது; விமானிகள் உயிர் தப்பினர்


மத்திய பிரதேசத்தில் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது; விமானிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:30 PM GMT (Updated: 25 Sep 2019 9:16 PM GMT)

மத்திய பிரதேசத்தில் பயிற்சி போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிர் தப்பினர்.

குவாலியர்,

மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தை சேர்ந்த மிக்-21 ரக பயிற்சி போர் விமானம் ஒன்று நேற்று காலையில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. இதில் 2 விமானிகள் பயிற்சியில் இருந்தனர்.

விமானப்படை தளத்தில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ள பிந்த் மாவட்டத்தின் ஆலோரி கிராமத்துக்கு அருகே சவுதாரிபுரா பகுதியில் விமானம் சென்றபோது திடீரென விமானப்படை தளத்துடனான தொடர்பை இழந்தது. பின்னர் எதிர்பாராதவிதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. மேலும் உடனடியாக விமானம் தீப்பிடித்து எரிந்தது.

எனினும் அதில் இருந்த விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதியினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குவாலியர் விமானப்படை தளத்துக்கு போலீசார் கூறினர்.

உடனே விமானப்படை உயர் அதிகாரிகள் குழு ஒன்று, ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், போலீசார் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் 2 விமானிகளையும் மீட்டனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அடிக்கடி விழுந்து நொறுங்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்தவகையில் கடந்த 2016-ம் ஆண்டுக்குப்பின் 27 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கி இருப்பதாக கடந்த ஜூன் மாதம் ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story