மராட்டியம்: பாஜக- சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்


மராட்டியம்:  பாஜக- சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில்  உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 26 Sep 2019 4:00 PM GMT (Updated: 26 Sep 2019 4:01 PM GMT)

மராட்டியத்தில் பாஜக- சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ், வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் முதல் சுற்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டன.

ஆனால் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி இடையே தொகுதி  பங்கீட்டில் கடும் இழுபறி ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் தங்களது கட்சிக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக பா.ஜனதா கருதுகிறது. இதனால் பா.ஜனதா கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தது. அதே வேளையில் சிவசேனாவோ முதல்-மந்திரி பதவி, தொகுதி உள்பட அனைத்தையும் சரிசமமாக பிரித்துக்கொள்ளவேண்டும் என  அடம் பிடித்து வந்தது. 

இதனால் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டது.  இந்தநிலையில், நீண்ட இழுபறிக்கு பின் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆங்கில தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி ,   144 இடங்களில் பாஜகவும் 126 இடங்களில் சிவசேனாவும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய 18 தொகுதிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவுக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story