ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுப்பு - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Sep 2019 9:59 AM GMT (Updated: 30 Sep 2019 10:19 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. பின்னர் அவருடைய காவல் முடிவடைந்தததால் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 5-ந் தேதி அவரை தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

இந்த வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19-ந் தேதி அவருடைய நீதிமன்ற காவல் வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தனி நீதிபதி சுரேஷ்குமார் கைத் விசாரித்து வந்தார். ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனுசிங்வி ஆகியோரும் சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் வாதிட்டனர். இருதரப்பிலும் 5 நாட்கள் வாதங்கள் நடத்தப்பட்டு கடந்த 27-ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் கைத், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பை வழங்கினார். அவர் தன்னுடைய தீர்ப்பில் கூறியதாவது:-

ப.சிதம்பரம் வலிமையான நிதி மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் இருந்திருக்கிறார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும், நீண்டகாலமாக மூத்த வழக்கறிஞராகவும் உள்ளார் என்பதை மறுக்க முடியாது. வெளிநாட்டிலும் அவருக்கு சில தொடர்புகள் இருக்கலாம்.

வெளிநாடு தப்பிச் செல்லக்கூடிய வாய்ப்பு, ஆதாரங்களை அழிக்கக்கூடிய வாய்ப்பு, சாட்சியங்களை பாதிக்க வாய்ப்பு ஆகிய 3 காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் மனு மீது முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அவர் இதுவரை வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றதில்லை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

அவர் மீது ஏற்கனவே வெளிநாடு தப்பிச்செல்லக் கூடாது என்பதற்கான நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆதாரங்கள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டு சி.பி.ஐ. வசம் உள்ளது. ப.சிதம்பரம் எம்.பி. தானே தவிர ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொள்ளலாம்.

அவர் சாட்சியங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்க வாய்ப்பு உண்டு என்பதாலும், சி.பி.ஐ. விசாரணை முன்னேறிய நிலையில் இருப்பதாலும் அவருக்கு ஜாமீன் வழங்க விரும்பவில்லை. எனவே, மனுதாரரின் ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story