”நான் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன்” -ஆதித்யா தாக்ரே


”நான் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன்” -ஆதித்யா தாக்ரே
x
தினத்தந்தி 30 Sep 2019 2:09 PM GMT (Updated: 30 Sep 2019 2:09 PM GMT)

”நான் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன்” என்று சிவசேனாவின் முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆதித்யா தாக்ரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் அறிவித்தன. ஆனால் சரிசமமான தொகுதியை சிவசேனா கேட்கிறது. மேலும் முதல்-மந்திரி பதவியையும் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, இதற்கு பா.ஜனதா சம்மதம்  தெரிவித்ததாக சிவசேனா கூறி வருகிறது.

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில்  சிவசேனாவின் முதல்வர் வேட்பாளராக பால் தாக்கரேவின் பேரனும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்புக்கு கூட்டணி கட்சியான பாஜகவிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவிதான் கொடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், ஆதித்யா தாக்கரேவின் அரசியல் நுழைவு இந்த தேர்தலில் என்னவாகும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பால் தாக்கரே கடந்த 1966-ல் ஆரம்பித்தார். அது முதற்கொண்டு அவரது குடும்பத்தை சேர்ந்த எவரும் தேர்தலில்  போட்டியிடாமல் இருந்தனர். இப்போது முதன்முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் அவரது பேரன் நேரடி தேர்தலில் போட்டியிடுகிறார். சிவசேனா வலுவாக இருக்கும் வோர்லி தொகுதியில் 29 வயதான ஆதித்யா தாக்கரே களம் இறக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆதித்யா தாக்ரே “ நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்றார்.

சிவசேனாவை உருவாக்கிய பால் தாக்கரேவுக்கு அவரது மகனும், தற்போதைய தலைவருமான உத்தவ் தாக்கரே ஒரு வாக்குறுதி அளித்துள்ளாராம். அதாவது, சிவசேனாவை சேர்ந்த ஒருவர் மகாராஷ்ராவின் முதல் அமைச்சராக வருவார் என்பது அந்த வாக்குறுதி. இதனை கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தின்போது உத்தவ் தாக்கரே நினைவு கூர்ந்தார்.

Next Story