என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு


என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 30 Sep 2019 11:05 PM GMT (Updated: 30 Sep 2019 11:05 PM GMT)

சென்னை அருகே பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

புதுடெல்லி,

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி (வயது 23). சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் அவரது தந்தை பாலசுப்பிரமணியன் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து பிப்ரவரி 22-ந் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் உமா மகேஸ்வரி பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த உஜ்ஜல் மண்டல், உத்தம் மண்டல்(23), ராம் மண்டல்(23) ஆகியோர் உமா மகேஸ்வரியை கற்பழித்துவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்த செல்போன், கிரெடிட் கார்டு ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உஜ்ஜல் மண்டல் உள்பட 3 பேருக்கும் செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து உஜ்ஜல் மண்டல் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.


Next Story