டெல்லி- திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் : போலீசார் அதிரடி சோதனை


டெல்லி- திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் : போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 3 Oct 2019 7:48 AM GMT (Updated: 3 Oct 2019 7:48 AM GMT)

டெல்லி- திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

தென் மாநிலங்களில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் திருப்பதி கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால் திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி நாச வேலையில் ஈடுபடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் திருப்பதியில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

3 ஆயிரத்து 500 போலீசார், அதிரடிப்படை வீரர்கள், இரவிலும் குறி பார்த்து சுட கூடிய அதிநவீன பைனாகுலர் பொருத்தப்பட்ட இயந்திர துப்பாக்கிகளுடன் கூடிய போலீசார் ஆகியோர் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். 

திருப்பதி மலையில் பொருத்தப்பட்டுள்ள ஆயிரத்து 500 சிசிடிவி கேமரா மூலம் 24 நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது தவிர எந்த விதமான சிக்கலான சூழலையும் சமாளிக்கும் வகையில் திருப்பதி மலையை பாதுகாப்பு பத்ம வியூகத்திற்குள் ஆந்திர மாநில போலீசார் கொண்டுவந்துள்ளனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி என தகவல் வெளியானதை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story