வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு எடியூரப்பா நன்றி


வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1,200 கோடி  நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு எடியூரப்பா நன்றி
x
தினத்தந்தி 5 Oct 2019 1:39 AM GMT (Updated: 5 Oct 2019 1:39 AM GMT)

வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

தென்மேற்கு பருவமழையால் நாட்டின் பல மாநிலங்களில் பெருத்த சேதம் விளைந்தது. இதைத்தொடர்ந்து மாநிலங்களில் நடந்து வரும் நிவாரண பணிகளை உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு செய்தார். இதில் கர்நாடகா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

அதன்படி கர்நாடகாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1200 கோடியும், பீகார் மாநிலத்துக்கு முன்கூட்டிய ஒதுக்கீடாக 2 தவணையில் ரூ.613.75 கோடி வழங்கவும் ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 இந்த நிலையில், வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, “ தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முன்பணமாக ரூ 1,200 கோடியை மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. கர்நாடக மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

அதேவேளையில், கர்நாடக காங்கிரஸ் மத்திய அரசை விமர்சித்துள்ளது. வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.3200 கோடி நிதி ஒதுக்கக் கோரிய நிலையில், வெறும் 1,200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

Next Story