வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் சோனியா சந்திப்பு


வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் சோனியா சந்திப்பு
x
தினத்தந்தி 6 Oct 2019 11:15 PM GMT (Updated: 6 Oct 2019 9:59 PM GMT)

வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினாவை சோனியா காந்தி சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். அவர் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே கலாசாரம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

மேலும், வட இந்திய மாநிலங்களுக்கு வங்காள தேசத்தில் இருந்து சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) இறக்குமதி செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ராமகிருஷ்ணா மட வளாகத்தில் விவேகானந்தர் பவன், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் காணொலி காட்சி வழியாக திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் ஷேக் ஹசினா சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் டெல்லியில் வங்காளதேச தூதரகத்தில் ஷேக் ஹசினாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எம்.பி. ஆனந்த் சர்மா ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் நேற்று சந்தித்து பேசினர்.

ஷேக் ஹசினாவுடன் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.



 

இந்த தூதுக்குழுவில் இடம் பெற்றிராத காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் ஷேக் ஹசினாவை சந்தித்தார். அப்போது ஷேக் ஹசினாவை பிரியங்கா காந்தி கட்டித்தழுவினார். இது தொடர்பாக அவர் படத்துடன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், ஷேக் ஹசினாவை சந்திக்க மிக நீண்ட காலமாக தான் காத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது தனிப்பட்ட இழப்பு, கஷ்டங்களில் இருந்து துணிச்சலுடனும், விடா முயற்சியுடனும் மீண்டு வந்தது ஷேக் ஹசினாவின் பலம் என்றும், அது தனக்கு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது என்றும் பிரியங்கா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story