ராகுல் காந்தியின் திடீர் வெளிநாடு பயணம் - காங்கிரஸ் விளக்கம்


ராகுல் காந்தியின் திடீர் வெளிநாடு பயணம் - காங்கிரஸ் விளக்கம்
x
தினத்தந்தி 7 Oct 2019 6:37 PM GMT (Updated: 7 Oct 2019 6:37 PM GMT)

ராகுல் காந்தியின் திடீர் வெளிநாடு பயணம் குறித்த சர்ச்சைக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,     

மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜனதா ஆளும் இந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

அங்கு தற்போது பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி பாங்காக் சென்று விட்டதாக பா.ஜனதாவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரணவ் ஜா தெரிவிக்கையில், “பொதுவாழ்வில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயக மரபுபடி, பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு. ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எப்போதுமே மதிப்பளிக்க வேண்டும். தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, தனிப்பட்ட பயணங்களை பொது வாழ்வின் ஒரு அங்கமாக சித்தரிக்க முற்படுபவர்கள், தனிநபர் சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது டுவிட்டரில், “ஒருவரின் தனிப்பட்ட விவகாரங்களை பொதுவாழ்வுடன் இணைத்து பார்க்க கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story