வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு தேர்தல் கமிஷனின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலிக்கிறது


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு தேர்தல் கமிஷனின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலிக்கிறது
x
தினத்தந்தி 8 Oct 2019 11:00 PM GMT (Updated: 8 Oct 2019 9:00 PM GMT)

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப் பதற்கு சட்டரீதியான ஆதரவு கேட்டு தேர்தல் கமிஷன் அனுப்பிய பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

புதுடெல்லி,

ஒரே வாக்காளர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முட்டுக்கட்டை போட்டது.

அதன்பின்னர் தேர்தல் கமிஷன் தனது ‘தவறில்லாத, உறுதிப்படுத்தப்பட்ட தேசிய வாக்காளர் பட்டியல்’ திட்டத்தின் கீழ் வாக்காளர்களின் ஆதார் எண்ணை சேகரித்தது.

இந்நிலையில் தேர்தல் கமிஷன் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதில், ‘வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கக்கோரும் வாக்காளர்களின் ஆதார் எண்களை கேட்டுப்பெறுவதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகள் திருத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தது.

இந்த பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அமைச்சரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஒரே வாக்காளரின் பெயர் பல இடங்களில் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டு, தவறு இல்லாத வாக்காளர் பட்டியலை பெறமுடியும். ஆதார் எண்களை பெறுவதற்கு அனுமதிக்கக்கூடிய சட்டம் தேவை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. எனவேதான் தேர்தல் கமிஷன் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிந்துரைத்துள்ளது என்று தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story