புதுச்சேரி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


புதுச்சேரி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 13 Oct 2019 6:12 AM GMT (Updated: 13 Oct 2019 6:12 AM GMT)

புதுச்சேரி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது.

புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் அய்யனார் கோவில் ஏரிக்கரையில் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் பட்டாசுகள் வெடித்ததில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த விழுப்புரம் சொர்ணாவூரை சேர்ந்த தீபா, கரையாம்புத்தூர் வரலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பட்டாசு ஆலை உரிமையாளர் குணசுந்தரி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வைத்தீஸ்வரி (27), கரையாம்புத்தூர் கலாமணி (45) ஆகிய பெண்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைத்தீஸ்வரி இறந்து போனார்.

தொடர்ந்து பட்டாசு ஆலையின் உரிமையாளர் குணசுந்தரி, கலாமணி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் குணசுந்தரி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். கலாமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முன்னதாக அரசு ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, விஜயவேணி எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர். குணசுந்தரி, கலாமணி ஆகியோரது குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்து சென்றனர்.

இதனிடையே, சிகிச்சை பெற்று வந்த கலாமணி இன்று உயிரிழந்து உள்ளார்.  இதனால் புதுச்சேரி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்து உள்ளது.

Next Story