முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு


முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Oct 2019 12:00 AM GMT (Updated: 13 Oct 2019 10:17 PM GMT)

முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

லத்தூர்,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று மராட்டிய மாநிலத்தில் போட்டி பிரசாரம் மேற்கொண்டனர். பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தார். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

லத்தூர் மாவட்டம் அவுசா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவில் ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் மோடி அரசாங்கமோ நிலவுக்கு விண்கலம் அனுப்பியதை சொல்லி, ‘சந்திரனை பாருங்கள்’ என்கிறது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது, 2017-ம் ஆண்டு எல்லையில் டோக்லாம் பகுதியில் சீன படைகள் அத்துமீறியது பற்றி ஜின்பிங்கிடம் மோடி பேசினாரா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

மத்திய அரசு பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. 15 பெரும் பணக்காரர்களின் ரூ.5½ லட்சம் கோடி கடனை மோடி அரசு ரத்து செய்து இருக்கிறது.

விவசாயிகளின் துன்பம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பற்றியெல்லாம் மத்திய அரசு கவலைப்படவில்லை. பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Next Story