‘எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்’ - அரியானா வேட்பாளரின் பேச்சால் அதிர்ச்சி


‘எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்’ - அரியானா வேட்பாளரின் பேச்சால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 Oct 2019 10:15 PM GMT (Updated: 20 Oct 2019 9:02 PM GMT)

எந்திரங்களை மாற்றியமைத்து விட்டோம். எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும் என்று கூறிய அரியானா வேட்பாளரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிந்த்.

அரியானா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்‌ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் அவர் பேசும்போது, ‘இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தில் நீங்கள் எந்த பொத்தானை வேண்டுமானாலும் அழுத்துங்கள். ஆனால் உங்கள் வாக்கு பா.ஜனதாவுக்குத்தான் விழும். அதற்கேற்றவாறு நாங்கள் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டோம்’ என்று கூறினார்.

இந்த வீடியோ பதிவு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜன்னாயக் ஜன்டா கட்சி தேர்தல் கமிஷனில் புகார் அளித்து உள்ளது. மேலும் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் தன்வரும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.


Next Story