சட்டசபை தேர்தல்: மராட்டியம், அரியானாவில் அமைதியான வாக்குப்பதிவு


சட்டசபை தேர்தல்: மராட்டியம், அரியானாவில் அமைதியான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 Oct 2019 11:15 PM GMT (Updated: 21 Oct 2019 9:44 PM GMT)

மராட்டியம், அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

மராட்டிய தேர்தலில் ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி, பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதுதவிர ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் (நாக்பூர் தென்மேற்கு), காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான் (போகர்), பிரிதிவிராஜ் சவான் (காரட்), மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் (சங்கம்னேர்), தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் (பாராமதி), யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே (மும்பை ஒர்லி), மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் (கோத்ரூட்) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600 வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 96 ஆயிரத்து 661 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக 3 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மராத்வாடா பகுதியில் உள்ள மாவட்டங்களில் காலையில் பலத்த மழை பெய்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது.

அரசியல் கட்சி தலைவர்களும், இந்தி சினிமா நட்சத்திரங்களும் காலையிலேயே வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.



 

தமிழக கவர்னர் பன்வாரி லால் தனது சொந்த ஊரான நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார். இதேபோல முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின்கட்காரி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் நாக்பூரில் வாக்களித்தனர்.

ஓட்டுப்போட்ட பின் நிதின் கட்காரி நிருபர்களிடம் பேசுகையில், பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது மருமகன் சதானந்த் சுலே, பேத்தி ரேவதி சுலே ஆகியோருடன் தெற்கு மும்பையில் உள்ள வாக்குப்பதிவு மையத்துக்கு சென்று ஓட்டு போட்டார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மனைவி ராஷ்மி தாக்கரே, மூத்த மகனும், ஒர்லி தொகுதி சிவசேனா வேட்பாளருமான ஆதித்ய தாக்கரே, இளைய மகன் தேஜஸ் தாக்கரே ஆகியோருடன் பாந்திரா கிழக்கு காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் தனது தொகுதியான சங்கம்னேரிலும், முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி மும்பை தாதரிலும், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கிலும் வாக்களித்தனர்.

மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் குடும்பத்தினருடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார்.



 

நடிகை வித்யா பாலன் கார் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்். நடிகை ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மாமியார் ஜெயா பச்சனுடன் வந்து ஜூகுவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டுப்போட்டார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக நடிகர் அமிதாப்பச்சன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் ஓட்டுப்போட வரவில்லை.

இந்தி சினிமா நட்சத்திரங்களான தர்மேந்திரா, கோவிந்தா, சல்மான்கான், அமீர்கான், ஷாருக்கான், அக்‌ஷய் குமார், பிரீத்தி ஜிந்தா, மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே, ஹேமமாலினி உள்ளிட்டோரும் உற்சாகத்துடன் வந்து மும்பையில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போட்டனர்.

நடிகை ஜெனிலியா கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் சென்று லத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார்.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த கட்சிரோலி மாவட்டத்தில் தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி லகேரி, மம்போடுர், புசேவாடா, குகாமேடா, லஸ்கர், அல்டான்டி, கோப்னர் உள்ளிட்ட கிராமங்களில் நக்சலைட்டுகள் பேனர்கள் வைத்திருந்தனர். என்றாலும் இந்த கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப்போட்டனர். மேலும் நக்சலைட்டுகள் வைத்திருந்த பேனர்களையும் அவர்கள் தீ வைத்து எரித்தனர்.

அமராவதி மாவட்டத்தில் சுவாபிமானி கட்சி வேட்பாளர் தேவேந்தி புயர் நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டு இருந்தபோது, முகமூடி அணிந்த 3 பேர் கும்பல் அவரது காரை வழிமறித்தது. வேட்பாளரை கீழே தள்ளி அடித்து உதைத்த அந்த கும்பல் பின்னர் காருக்கு தீ வைத்து சென்றது.

நாந்தெட் மாவட்டத்தில் காரில் சென்ற வஞ்சித் பகுஜன் அகாடி வேட்பாளர் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வேட்பாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் சில இடங்களில் சிறு, சிறு மோதல்கள் நடந்தன.

மற்றபடி பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் இன்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

63 சதவீதம் வாக்குகள் பதிவாயின. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 63.38 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் 1,169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த மாநிலத்திலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. காலையில் பனிமூட்டம் காணப்பட்டதால் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு பின்னர் விறுவிறுப்பு அடைந்தது.

முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் கர்னால் பிரேம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட்டார். ஜனநாயக் ஜனதா தலைவர் துஷ்யந்த் சவுதாலா தனது குடும்பத்தினருடன் டிராக்டரில் வந்து சிர்சாவில் உள்ள ஒட்டுச்சாவடியில் வாக்களித்தார்.

நுவா என்ற இடத்தில் வாக்குப்பதிவின் போது பாரதீய ஜனதா-காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டதில் 6 பேர் காயம் அடைந்தனர். இதுபோன்ற ஒரு சில சம்பவங்களை தவிர பொதுவாக ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 2014-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 76.54 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

இந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த இரு மாநில சட்டசபை தேர்தலுடன் உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா, பீகார் (தலா 5), அசாம், பஞ்சாப் (தலா 4), சிக்கிம் (3), தமிழ்நாடு, ராஜஸ்தான், இமாசலபிரதேசம் (தலா 2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார் (தலா 1) என மொத்தம் 51 சட்டசபை தொகுதிகளுக்கும், சதாரா (மராட்டியம்), சமஸ்திபூர் (பீகார்) ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


Next Story