அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்


அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 23 Oct 2019 6:43 AM GMT (Updated: 23 Oct 2019 7:56 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ளார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கில், ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ந் தேதி கைது செய்தது. அமலாக்கப்பிரிவு வழக்கில் அவரை இன்று (24-ந் தேதி) வரை காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியும் அவரால் விடுதலையாக முடியவில்லை.

இந்த நிலையில், அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கோ, தலைமறைவாவதற்கோ வாய்ப்பு இல்லை என்று கூறி இருக்கிறது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய போது, விசாரணை கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் கூறி உள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் நிதி பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்துதான் விசாரித்து வருகின்றன. அப்படி இருக்கும் போது இரு விசாரணை அமைப்புகளும் அவரை தனித்தனியாக காவலில் வைத்து விசாரிக்க முடியாது.

ஆதாரங்களை அழிக்கவோ, சாட்சியங்களை கலைக்கவோ மனுதாரர் ஒருபோதும் முயன்றது இல்லை. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் விசாரணை அமைப்புகளிடம் இருப்பதால் அவற்றை திருத்தவோ, அழிக்கவோ முடியாது.

அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு ப.சிதம்பரம் எப்போதும் ஒத்துழைப்பு அளித்து வந்து இருக்கிறார். 74 வயதான அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அமலாக்கப்பிரிவு வழக்கில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே ப.சிதம்பரத்துக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story