சிவசேனாவுடன் இணைய போவதில்லை; சரத் பவார் பேட்டி


சிவசேனாவுடன் இணைய போவதில்லை; சரத் பவார் பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2019 8:36 AM GMT (Updated: 24 Oct 2019 8:36 AM GMT)

சிவசேனாவுடன் இணைய போவதில்லை என சரத் பவார் பேட்டியளித்து உள்ளார்.

நாக்பூர்,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநிலத்தில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்த பிறகு நடைபெறுகிற முதல் தேர்தல் என்கிற வகையில் இந்த தேர்தல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி-சிவசேனா கூட்டணி ஓரணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.

தேர்தல் களத்தில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட், காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.  இந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

மராட்டிய சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் பா.ஜ.க. கூட்டணி மதியம் 2 மணிநேரப்படி 162 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  இதேபோன்று காங்கிரஸ் கூட்டணி 96 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.  பிற கட்சிகள் 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறும்பொழுது, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி மற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து முடிவு செய்வோம்.  சிவசேனாவுடன் இணைய போவதில்லை என பேட்டியளித்து உள்ளார்.

Next Story