ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 30-ந் தேதி வரை அமலாக்கப்பிரிவு காவல் நீட்டிப்பு - தனிக்கோர்ட்டு உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 30-ந் தேதி வரை அமலாக்கப்பிரிவு காவல் நீட்டிப்பு - தனிக்கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Oct 2019 1:16 PM GMT (Updated: 24 Oct 2019 9:34 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு அமலாக்கப்பிரிவு காவலை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து டெல்லி தனிக்கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் கடந்த திங்கட்கிழமை ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ந் தேதி கைது செய்தது. அமலாக்கப்பிரிவு வழக்கில் அவரை நேற்று (24-ந் தேதி) வரை காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியும் அவரால் விடுதலையாக முடியவில்லை.

அமலாக்கப்பிரிவு காவல் முடிவடைந்ததை தொடர்ந்து ப.சிதம்பரம் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்னிலை யில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், “அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்கு சி.பி.ஐ. வழக்குக்கு முற்றிலும் மாறுபட்டது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் பற்றி தற்போது விசாரிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. கேள்விகளுக்கு பதில் அளிக்க ப.சிதம்பரம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். அவரிடம் மேலும் சில ஆவணங்கள் மற்றும் சிலர் அளித்த வாக்குமூலங்களை காண்பித்து விசாரணை நடத்த வேண்டும். எனவே அவருடைய காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என்றார்.

ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். அவர் வாதாடுகையில், ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிப்பதற்கு முன்வைக்கும் கோரிக்கைக்கு எந்த முகாந்திரமும் கிடையாது என்றும், அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவலை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி சுரேஷ்குமார் கயித் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனுசிங்வி, என்.ஹரிஹரன், தயான் கிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள்.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது அமலாக்கப்பிரிவு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story