ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு; ப. சிதம்பரத்திற்கு நவம்பர் 13ந்தேதி வரை நீதிமன்ற காவல்


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு; ப. சிதம்பரத்திற்கு நவம்பர் 13ந்தேதி வரை நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:52 AM GMT (Updated: 30 Oct 2019 11:52 AM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு நவம்பர் 13ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் கடந்த 21ந்தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப. சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16ந்தேதி கைது செய்தது.  தொடர்ந்து அவரது காவலை நீட்டிக்க கோரி கடந்த 24ந்தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை முறையீடு செய்தது.

இதன்படி, ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவலை வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ப. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ப. சிதம்பரத்தின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு செய்துள்ளார்.  இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரம் வேறு நீதிமன்றம் ஒன்றில் நாளை விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.  அமலாக்க துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் ப. சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்பின்பு, அமலாக்க துறை காவலில் வைத்து ப. சிதம்பரம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதற்காக ஒரு நாள் காவலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

எனினும், அமலாக்க துறையின் இந்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது.  இதுபற்றிய விசாரணையில், டெல்லி திகார் சிறையில் ப. சிதம்பரத்திற்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ப. சிதம்பரத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு தனி சிறை வசதி கொடுக்கலாம்.  3 வேளை வீட்டு உணவு வழங்கவும், போதிய மருத்துவ வசதி மற்றும் மேற்கத்திய கழிவறை வசதி வழங்கவும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

Next Story