நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது: காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது - துணைநிலை கவர்னர்கள் இன்று பதவியேற்பு


நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது: காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது - துணைநிலை கவர்னர்கள் இன்று பதவியேற்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 11:30 PM GMT (Updated: 30 Oct 2019 10:17 PM GMT)

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக முறைப்படி பிரிந்தது. அவற்றுக்கான துணைநிலை கவர்னர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார்கள்.

புதுடெல்லி,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி காஷ்மீர் இனிமேல் மாநிலம் இல்லை. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்துவிட்டது.

இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அவர்கள் இருவரும் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கின்றனர்.

அதன்படி கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஸ்ரீநகர், லே ஆகிய இடங்களில் பதவியேற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இருவருக்கும் காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.



 


 ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு புதுச்சேரியில் இருப்பது போல சட்டசபை இருக்கும். அங்கு போலீஸ் மற்றும் சட்டம்-ஒழுங்கு போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிலம் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வசம் இருக்கும்.

அதேநேரம் லடாக் யூனியன் பிரதேசம், சண்டிகாரைப்போல சட்டசபை இன்றி செயல்படும். அங்கு ஆட்சி முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவின் மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் அகற்றப்பட்டு உள்ளன. எனினும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளது. அங்கு இயல்புநிலை முழுவதுமாக இன்னும் திரும்பவில்லை.

இதைப்போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டு உள்ளனர். இதில் முன்னாள் முதல்-மந்திரிகளான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக முறைப்படி பிரிக்கப்பட்டு உள்ள நிலையில், காஷ்மீரை மாநிலமாகவே தொடரச்செய்ய வேண்டும் என தேசிய மாநாட்டுக்கட்சி கடைசிநேர வேண்டுகோள் விடுத்து உள்ளது. மன்னர் குலாப் சிங் உருவாக்கிய காஷ்மீர் மாநிலம் 200 ஆண்டுகள் பழமையானது என்றும், அது இந்தியாவின் கிரீடம் எனவும் அந்த கட்சியின் மாகாண தலைவர் தேவேந்தர் சிங் ரானா கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் எனவும், அதையே காஷ்மீர் அரசியல் சட்டமும் கூறுவதாகவும் தெரிவித்த ரானா, இதில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறினார். யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதால், தாங்கள் தனித்து விடப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


Next Story