அதிகார சம பங்கு என்பது முதல்வர் பதவியையும் சேர்த்து தான் - சிவசேனா மீண்டும் பிடிவாதம்


அதிகார சம பங்கு என்பது முதல்வர் பதவியையும் சேர்த்து தான் - சிவசேனா மீண்டும் பிடிவாதம்
x
தினத்தந்தி 31 Oct 2019 10:39 AM GMT (Updated: 31 Oct 2019 12:12 PM GMT)

அதிகார சம பங்கு என்பது முதல்வர் பதவியையும் சேர்த்து தான் என சிவசேனா மீண்டும் பிடிவாதம் பிடிக்கிறது.

மும்பை, 

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையின் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ந் தேதி வெளியானது.

இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் போதும் என்ற நிலையில், இருகட்சிகளின் பலம் 161 ஆக இருப்பதால், அந்த கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும், மந்திரி பதவியிலும் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, இது தொடர்பாக அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறினார். ஆட்சியில் சமபங்கு தொடர்பாக பா.ஜனதா எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மும்பை ஒர்லி தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் 29 வயது மகன் ஆதித்ய தாக்கரே வெற்றி பெற்ற நிலையில், அவரை முதல்-மந்திரியாக்க சிவசேனா விரும்புகிறது. 

சிவசேனா இன்று  மீண்டும் மராட்டிய  முதல்வர் பதவிக்கான தனது கோரிக்கையை கைவிடவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. அதிகாரத்தை சமமாகப் பகிர்வது என்பது  முதவர் பதவியையும்  சேர்த்துதான் என கூறி உள்ளது.

சிவசேனாவின் நாளேடான  சாமனாவில் கூறி இருப்பதாவது:-

மராட்டிய முதல்வர் அந்த செய்தியாளர் கூட்டத்தில் (இரு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்த பின்னர் நடந்த கூட்டம் ) அனைத்து அரசு பதவிகளும் சமமாக பகிரப்படும் என்று கூறினார். 

அரசு பதவிகளில் முதல்வர்  பதவி  வரவில்லை என்றால், அரசியல் அறிவியலின் பாடத்திட்டத்தை மீண்டும் மாற்றி எழுத வேண்டும்.

பாஜக, 2014 மக்களவைத் தேர்தலில் அற்புதமான செயல்திறனுக்குப் பிறகு, சிவசேனாவுடன்  இருந்து பிரிந்தது. தற்போது இரண்டாவது முறையாக  எங்களை பயன்படுத்தி விட்டு மீண்டும் கீழே தள்ளிவிட்டுவிட பார்க்கிறார்கள் என்று தலையங்கம் மேலும் கூறியது. ஆனால் நாங்கள் எளிதில் மறைந்து விட  மாட்டோம், ஏனென்றால் எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது

எனவே, இந்த ஒப்பந்தம்  முடிவு செய்யப்பட்டு  முத்திரையிடப்பட்டவை செயல்படுத்தப்பட வேண்டும், அதுதான் சிவசேனாவின் ஒரே கோரிக்கை. நம்பர் கேம் விளையாடுவதை விட இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை பின்பற்றுவது மிக முக்கியம் என  அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story