இந்திய கம்யூனிஸ்டு கட்சி முதுபெரும் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மரணம் பிரதமர் மோடி இரங்கல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி முதுபெரும் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மரணம் பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 31 Oct 2019 8:30 PM GMT (Updated: 31 Oct 2019 8:28 PM GMT)

இந்திய கம்யூனிஸ்டு கட்சி முதுபெரும் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா நேற்று காலமானார். அவருக்கு வயது 83. நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கொல்கத்தாவில் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல், இன்று தகனம் செய்யப்படுகிறது.

முன்பு ஒருங்கிணைந்த இந்தியாவிலும், தற்போது வங்காளதேசத்திலும் உள்ள பரிசலில் 1936-ம் ஆண்டு குருதாஸ் தாஸ்குப்தா பிறந்தார். 1985-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. ஆனார். 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நாடாளுமன்றவாதியாக புகழப்பட்டார்.

அவரது மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குருதாஸ் தாஸ்குப்தா, திறமையான நாடாளுமன்றவாதியாகவும், புகழ்பெற்ற தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “குருதாஸ் தாஸ்குப்தா, மிகவும் அர்ப்பணிப்பு உணர்வும், கொள்கைப்பிடிப்பும் கொண்டவர். நாடாளுமன்றத்தில் வலிமையான குரலாக திகழ்ந்தார். அவரது குறுக்கீடுகளை அனைத்து கட்சியினரும் ஆர்வத்துடன் கேட்டனர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story