அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய மாணவர்கள் 1,600 பேர் கல்விக்காக இந்தியா வருகை


அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய மாணவர்கள் 1,600 பேர் கல்விக்காக இந்தியா வருகை
x
தினத்தந்தி 2 Nov 2019 9:15 PM GMT (Updated: 2 Nov 2019 9:15 PM GMT)

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய மாணவர்கள் 1,600 பேர் கல்விக்காக இந்தியா வருகை தர உள்ளனர்.

புதுடெல்லி,

நாடுகளுக்கு இடையேயான கலாசார விழிப்புணர்வு மற்றும் அனுபவங்களை தெரிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு புதிய கொழும்பு திட்டத்தை அந்த நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1607 மாணவர்கள் கல்வி மற்றும் பணி சார்ந்த அனுபவங்களுக்காக அடுத்த ஆண்டு (2020) இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான அந்த நாட்டு பொறுப்பு தூதர் ரோட் ஹில்டன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறுகையில், ‘இந்திய உடற்கல்வி திட்டங்கள் மற்றும் கரிம கழிவு மேலாண் திட்டங்கள் உள்ளிட்ட இந்தியாவின் 64 திட்டங்கள் மூலம் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் மாணவர்களை அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு அனுப்ப இருக்கின்றன. இந்தியாவின் கலாசாரம், வணிக சூழல் மற்றும் மக்களின் உணர்வுகள் பற்றி அறிய விரும்பும் இளம் ஆஸ்திரேலிய தலைமுறையினருக்கு நாங்கள் உதவி வருகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த 1607 பேரை தவிர, மேலும் 6 இளங்கலை பட்டதாரி மாணவர்களும் புதிய கொழும்பு திட்ட ஊக்கத்தொகை பெற்று இந்தியா வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story