அது என்ன 50-50, புதிய வகை பிஸ்கெட்டா? மராட்டிய கூட்டணி பற்றி ஓவைசி கேள்வி


அது என்ன 50-50, புதிய வகை பிஸ்கெட்டா? மராட்டிய கூட்டணி பற்றி ஓவைசி கேள்வி
x
தினத்தந்தி 3 Nov 2019 2:51 AM GMT (Updated: 3 Nov 2019 2:51 AM GMT)

அது என்ன 50-50, புதிய வகை பிஸ்கெட்டா? என மராட்டியத்தில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா அதிகார பகிர்வு பற்றி ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாக்பூர்,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 24ந்தேதி வெளியானது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 தொகுதிகளும் கிடைத்தன.

ஆட்சி அமைக்க போதிய தொகுதிகளை பா.ஜ.க. பெறாத நிலையில், அக்கட்சிக்கும் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே அதிகார பகிர்வில் ஒப்புதல் ஏற்படவில்லை.  முதல் மந்திரி பதவியை இரண்டரை வருடம் தங்களுக்கு வழங்க வேண்டும் என சிவசேனா கூறி வந்தது.  ஆனால், பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்றும் தொடர்ந்து அவர் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடித்திடுவார் என்றும் அக்கட்சி கூறி வந்தது.

எனினும், ஆட்சியில் பங்கு வகிப்பது பற்றி 50-50 என்ற அடிப்படையில் தொடர்ந்து சிவசேனா வலியுறுத்தி வந்தது.  இது பலனளிக்காத நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி முயற்சி செய்து வருகிறது என்றும் தகவல் வெளியானது.

மராட்டியத்தில் காலந்தவறிய பருவமழை பொழிவால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த மழை பாதிப்பிற்காக விவசாயிகளுக்கு உடனடி உதவி தொகையாக ரூ.10 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஓவைசி பேசும்பொழுது, அது என்ன 50-50, புதிய வகை பிஸ்கெட்டா? மராட்டிய மக்களை காப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்யுங்கள்.  சடாரா பகுதியில் கனமழை ஏற்படுத்திய சேதம் பற்றி அவர்கள் (பா.ஜ.க. மற்றும் சிவசேனா) கவலை கொள்ளவே இல்லை.  அவர்கள் பேசுவது எல்லாம் 50-50 பற்றியே உள்ளது.  என்ன வகையான வளர்ச்சிக்கான விசயம் இது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story