‘நீதிபதிகளை விமர்சிப்பது என்னை பாதிக்கிறது’ - சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி வேதனை


‘நீதிபதிகளை விமர்சிப்பது என்னை பாதிக்கிறது’ - சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி வேதனை
x
தினத்தந்தி 3 Nov 2019 9:15 PM GMT (Updated: 3 Nov 2019 8:39 PM GMT)

சமூக ஊடகங்கள் மூலம் நீதிபதிகளை விமர்சிப்பது தன்னை பாதிப்பதாக சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது நீதிபதிகளை சமூக ஊடகங்களில் விமர்சிப்பது குறித்து வேதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பை விமர்சிப்பதற்கு பதிலாக நீதிபதிகளையே சமூக ஊடகங்களில் விமர்சிப்பது கோர்ட்டுகளின் செயல்பாட்டை பாதிக்கலாம். நீதிபதிகள் இவ்வாறு துன்புறுத்தப்படுவது ஒரு அளவுக்கு மேல் என்னையும் பாதிக்கிறது. யாரும் இதை விரும்பமாட்டார்கள். இதை புறந்தள்ளி செல்வதற்கு எல்லாரும் கடின உள்ளம் படைத்தவர்கள் அல்ல. நீதிபதிகளும் மனிதர்கள்தான்’ என்று தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பரவும் இதுபோன்ற கட்டுக்கடங்காத விமர்சனங்கள் மாபெரும் மோசடி மட்டுமின்றி, இதன் மூலம் நீதிபதிகளின் புகழுக்கு பங்கம் ஏற்படுவதாகவும் கூறிய நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தற்போதைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.


Next Story