காஷ்மீரின் 2 யூனியன் பிரதேசங்களுடன் இந்தியா வெளியிட்ட வரைபடத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு


காஷ்மீரின் 2 யூனியன் பிரதேசங்களுடன் இந்தியா வெளியிட்ட வரைபடத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:00 PM GMT (Updated: 3 Nov 2019 9:00 PM GMT)

காஷ்மீரின் 2 யூனியன் பிரதேசங்களுடன் இந்தியா வெளியிட்ட வரைபடத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இது கடந்த மாதம் 31-ந்தேதி நடைமுறைக்கு வந்தது. காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களை காட்டும் வரைபடத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அத்துடன் இந்திய வரைபடத்தில் இரு யூனியன் பிரதேசங்களும் சேர்க்கப்பட்டுள்ள வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வெளியிட்டுள்ள இந்த வரைபடங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனை ‘அரசியல் வரைபடங்கள்’ என வர்ணித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா வெளியிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்திய வரைபடத்தில் கில்ஜித்-பாகிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் எல்லைக்குள் உள்ளதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் தவறானதாகும். இதனை சட்டப்பூர்வமாக ஏற்றுகொள்ள முடியாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை இந்தியா அப்பட்டமாக மீறியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட ஜம்மு, காஷ்மீரின் நிலையை இந்தியாவின் எந்த நடவடிக்கையும் மாற்றிவிட முடியாது என தெரிவித்துள்ள பாகிஸ்தான், காஷ்மீர் மக்களுக்கு தங்கள் நாடு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் கூறியுள்ளது.


Next Story