முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை - சமூக நல்லிணக்கத்தை காக்க இருதரப்பும் வேண்டுகோள்


முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை - சமூக நல்லிணக்கத்தை காக்க இருதரப்பும் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Nov 2019 9:30 PM GMT (Updated: 5 Nov 2019 9:24 PM GMT)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதையொட்டி முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். சமூக நல்லிணக்கத்தை காக்க இருதரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி நாட்டில் அமைதி தொடர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு நடவடிக்கையாக சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி வீட்டில் சமுதாய நல்லிணக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கிருஷ்ண கோபால், ராம்லால், முன்னாள் மத்திய மந்திரி ஷாநவாஸ் உசேன் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த மதகுருக்கள், கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நாட்டில் எந்த சூழ்நிலையிலும் சமூக, மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் காப்பதுடன் மேலும் பலப்படுத்தும் வகையில் செயல்படுவது என கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

சமுதாயத்தில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் தங்கள் சுயலாபத்துக்காக கெடுக்கும் சதிச்செயலில் ஈடுபட்டுள்ள சக்திகள் குறித்து மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இருதரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.

மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, “வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது கலாசாரம். இந்த ஒற்றுமையின் பலத்தை பாதுகாப்பது சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் கூட்டு பொறுப்பாகும்” என்றார்.

இந்த கூட்டத்தில் ஜமாத் உலாமா இ ஹிந்த் பொதுச் செயலாளர் மஹ்மூத் மதானி, சினிமா தயாரிப்பாளர் முசாபர் அலி, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய உறுப்பினர் கமால் பரூக்கி, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக், ஜியா பிரிவு மதகுரு கல்பே ஜாவத் உள்ளிட்ட முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Next Story