அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதன் 70 ஆண்டுகள் நிறைவு விழா: 26-ந் தேதி நாடாளுமன்ற கூட்டு கூட்டம் - ஜனாதிபதி, பிரதமர் உரையாற்றுகிறார்கள்


அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதன் 70 ஆண்டுகள் நிறைவு விழா: 26-ந் தேதி நாடாளுமன்ற கூட்டு கூட்டம் - ஜனாதிபதி, பிரதமர் உரையாற்றுகிறார்கள்
x
தினத்தந்தி 6 Nov 2019 11:30 PM GMT (Updated: 6 Nov 2019 9:56 PM GMT)

அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதன் 70 ஆண்டுகள் நிறைவு விழாவினையொட்டி, 26-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

புதுடெல்லி,

நாட்டின் அரசியல் சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி, அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.

வருகிற 26-ந் தேதியுடன், அரசியல் சட்டம் ஏற்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை குறிக்கும்வகையில், நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 26-ந் தேதி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடக்கிறது. முற்பகலில் தொடங்கும் நிகழ்ச்சி, 2 மணி நேரத்துக்கு மேல் நடக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மாநிலங்களவை தலைவராக உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் பேசுகிறார்கள்.

இந்த கூட்டத்தில், இரு அவைகளின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி நள்ளிரவு, ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை தொடங்குவதற்காக, நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடைபெற்றது. அதேபாணியில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story