அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மராட்டிய ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு


அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மராட்டிய ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 7 Nov 2019 10:21 AM GMT (Updated: 7 Nov 2019 10:21 AM GMT)

அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் மராட்டிய ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டசபை  தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தன்னுடைய அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் செய்தி வெளியிட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, சிவசேனா எம்.எல்.ஏக்களை 2 நாட்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்க அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. 

இதனால், மராட்டிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கு மத்தியில், மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜக நிர்வாகிகள் கிரிஷ் மகாஜன், சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முன்காண்டிவார் மற்றும் ஆஷிஸ் செலார் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மராட்டியத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் விளக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

Next Story