சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அயோத்தியில் 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2019 12:13 AM GMT (Updated: 8 Nov 2019 12:13 AM GMT)

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி, அங்கு 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.

இது தொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து விரும்பத்தகாத விளைவுகள் நடந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்துக்கு, குறிப்பாக அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

அந்த உத்தரவில், பதற்றமான எல்லா இடங்களிலும் போதுமான பாதுகாப்பு படையினரை அமர்த்த வேண்டும்; நாட்டில் எங்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்கொள்வதற்கு நாடு முழுவதும் இவ்வாறு தயாராகி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய நிலம் அமைந்திருக்கும் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. அங்கு ஏற்கனவே 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

தீர்ப்பு வெளியானதும் அயோத்தியில் எத்தகைய சூழல் நிலவுமோ? என்ற அச்சம் மாவட்டம் முழுவதும் மக்களிடம் நிலவி வருகிறது. இதனால் சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே வசித்து வரும் மக்கள், இப்போதே அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

மேலும் இந்த மாதம் நடத்த திட்டமிட்டிருக்கும் திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் சிலர் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து நாடி வரும் அவர்கள், திருமண நிகழ்ச்சிகளை தள்ளி வைக்கட்டுமா? என வினவி வருகின்றனர்.

ஆனால் திட்டமிட்டபடி திருமணம் போன்ற விழாக் களை நடத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கலெக் டர் அனுஜ் குமார் ஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அயோத்தி வழக்கு தீர்ப்புக்குப்பின் மாவட்டத்தில் இயல்பு நிலை உறுதியாக பாதுகாக்கப்படும். எந்த நிலையிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சட்டம், ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம்.

வதந்திகளை பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்துமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் தீர்ப்புக்குப்பின்னரும் சுமுகமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அமைதி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அங்குள்ள மக்களிடையே ஒருவித பதற்றம் நிலவி வருவதாகவே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story