சென்னையில் சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கு: ராணுவ அதிகாரியின் ஆயுள் தண்டனை குறைப்பு


சென்னையில் சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கு: ராணுவ அதிகாரியின் ஆயுள் தண்டனை குறைப்பு
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 10:12 PM GMT)

சென்னையில் ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்க சென்ற சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் ஆயுள் தண்டனையை 10 ஆண்டாக குறைத்தும், சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவ குடியிருப்பில் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் தில்சன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த வழக்கில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கந்தசாமி ராமராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து விரைவு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து கந்தசாமி ராமராஜ் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக கந்தசாமி ராமராஜ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் சந்தான கவுடர், அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கினார்கள்.

அதில் ‘குற்றவாளி கந்தசாமி ராமராஜ் கொல்ல வேண்டும் என்ற உள்நோக்கம் இன்றி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். எனவே இக்குற்றம் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302-ல் இருந்து 304-க்கு மாற்றப்படுகிறது. எனவே குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்படுகிறது. மேலும் இறந்து போன சிறுவனின் பெற்றோருக்கு குற்றவாளி ரூ.10 லட்சம் இழப்பு தொகையாக செலுத்த வேண்டும். இல்லை என்றால் கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்கவேண்டும்’ என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story