‘அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்’ - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருக்கள் வலியுறுத்தல்


‘அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்’ - இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Nov 2019 11:30 PM GMT (Updated: 8 Nov 2019 11:51 PM GMT)

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

லக்னோ,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது. சுதந்திர இந்தியாவின் மிகவும் சிக்கலான வழக்கு என கருதப்படும் இந்த வழக்கின் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த தீர்ப்பை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

அதேநேரம் அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து பிரிவினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அந்தவகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருக்கள் சிலரும் நேற்று இந்த கோரிக்கையை வெளியிட்டு உள்ளனர்.

லக்னோ மசூதி இமாம்

இது தொடர்பாக லக்னோ மசூதியின் இமாம் மவுலானா காலித் ரஷீத் பிராங்கி மகலி கூறுகையில், ‘சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான வழக்கு, அயோத்தி வழக்கு. எனவே இந்த வழக்கின் தீர்ப்பை மதித்து, நல்லிணக்கத்தை பேண வேண்டியது அனைவரின் கடமையாகும். இந்த தீர்ப்பை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். எந்த சமூகத்தவரின் மத உணர்வையும் புண்படுத்தாமல், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதைப்போல, ‘எந்த மதத்தவராக இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும்’ என அனைத்திந்திய ஷியா தனிச்சட்ட வாரியத்தை சேர்ந்த மவுலானா யாகூப் அப்பாசும் கூறினார்.

பெஜாவர் மடாதிபதி

ஹர்சரத்கஞ்ச் அனுமன் கோவில் பூசாரி சர்வேஷ் சுக்லா கூறும்போது, ‘இந்திய அரசியல்சாசனம் மற்றும் நீதித்துறை மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். மக்கள் தங்கள் வீடு, நகரம், மாநிலம், தேசத்தின் மேம்பாடு குறித்துதான் பேச வேண்டும். மத உணர்வுகளில் இருந்து விலகிச்செல்லக்கூடாது. இந்திய மக்கள் மிகுந்த முதிர்ச்சித்தன்மையுடன் நடந்து கொள்வார்கள். அவர்கள் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறிய பெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமிகள், இந்த தீர்ப்பை கொண்டாடுபவர்கள் தங்கள் வீடுகளில் மட்டும் பிரார்த்தனை மூலம் கொண்டாடலாம் என்றும் தெரிவித்தார்.

கிறிஸ்தவ பாதிரியார்

லக்னோ கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்ட அதிபர் பாதிரியார் டொனால்டு டிசோசா, ‘நம்முடையது, செயல்பாட்டு ஜனநாயகம் ஆகும். சட்டத்தின் ஆட்சியைத்தான் நாம் பின்பற்றுகிறோம். இதில் கோர்ட்டு தீர்ப்புகளை எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் முற்றிலும் மதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.


Next Story